சனி, 11 பிப்ரவரி, 2023
மதச் சீர்திருத்தமும், புரட்டஸ்தாந்து நடவடிக்கையும்
மதச் சீர்திருத்தமும், புரட்டஸ்தாந்து நடவடிக்கையும்
மேற்கு ஐரோப்பிய வரலாறு மத்திய யுகத்திலிருந்து நவீன யுகத்திற்கு மாறியதில் முக்கிய நிகழ்வாக விளங்குவது மதச் சீர்திருத்தமாகும். 16ஆம் நூற்றாண்டில் ஐரோப்பாவில் ஏற்பட்ட இந்த மதச் சீர்திருத்தத்தின் மூலம் கிறிஸ்தவசபை பிளவுற்றது. இந்த நடவடிக்கையின் முக்கிய நோக்காக விளங்கியது கத்தோலிக்க திருச்சபையில் சீர்திருத்தத்தை ஏற்படுத்துவதாகும். ஜேர்மனியில் தோற்றம் பெற்ற இவ் இயக்கம் பின்னர் படிப்படியாக ஏனைய நாடுகளுக்கும் பரவியது. 1516 ஆம் ஆண்டு கத்தோலிக்க சபைக்கு எதிராக ஆரம்பிக்கப்பட்ட எதிர் நடவடிக்கைகள் புரட்டஸ்தாந்து சீர்திருத்தம் எனப்படுகின்றது.
மதச் சீர்திருத்த இயக்கத்தின் தோற்றத்திற்கான காரணங்கள்
சமயக் காரணங்கள்
மத்தியகாலத்தின் பிற்பகுதியில் திருச்சபை ஊழல்கள் நிறைந்ததாக இருந்ததுடன் செல்வம் மிகுந்த நிறுவனமாகவும் திகழ்ந்தது. மத்திய காலத்தில் கத்தோலிக்கசபை பெரும் நிலப்பரப்பையும் சொத்துக்களையும் உரிமையாக்கி; கொண்டிருந்தது. குருமார்கள் சமயக் கல்வியில் அக்கறை காட்டாமல் மூடநம்பிக்கையில் மூழ்கி இருந்தனர். இவர்களால் சுயநலநோக்குடன் சமய அதிகாரங்கள் துஷ்பிரயோகம் செய்யப்பட்டன. குருமார்கள் உலக வாழ்க்கை, ஆடம்பரங்கள் என்பனவற்றில் ஈடுபாடு கொண்டிருந்தனர். பிரபுக்கள் தமது இறுதிக்காலத்தில் மோட்சமடைய எழுதிவைத்த சொத்துக்களாலும் திருச்சபை செல்வத்தில் திளைத்திருந்தது மேலும் ஒவ்வொரு கிறிஸ்தவ குடும்பமும் “பீற்றர்பென்ஸ்” எனும் வரியை போன்று குடும்பத்தின் வருமானத்தில் 1ஃ10 பகுதியை “டயித்” எனும் வரியாக செலுத்த வேண்டியிருந்தது. இவ்வாறு வரிகளும் சொத்துக்கயையும் பெற்றிருந்த கத்தோலிக்க குருமார் சுகபோக வாழ்வு வாழ்ந்ததுடன் லௌகீக வாழ்வுக்கும் இசைவாக்கம் பெற்றிருந்தனர். இத்தகைய நிலமைகள் திருச்சபையின் மீது மக்களுக்கு வெறுப்பினை அதிகரிக்கச் செய்தது.
அதிகாரத்தை தக்கவைத்துக் கொள்ளும் பொருட்டு கிறிஸ்தவசபை பல வழிகளை மேற்கொண்டது. மக்கள் மத்தியில் சமயரீதியான கருத்துக்களை தாம் மட்டுமே எடுத்துச் செல்ல வேண்டும் என்பதற்காக இலத்தீன் மொழியிலிருந்த கிறிஸ்தவ வேதாகமத்தை சுதேச மொழிக்கு மொழிபெயர்த்தனர். அவ்வாறு மொழிபெயர்க்கும் போது அதிலுள்ள கருத்துக்களை தமக்கேற்றவாறு மாற்றியமைத்தனர். இச் செயற்பாடு திருச்சபையின் மீதும் பாப்பரசர் மீதும் விமர்சனத்தை தோற்றுவித்தது.
பாப்பரசர்கள் அதிகமான ஆதிக்கத்தைக் கொண்டிருந்தனர். கிறிஸ்தவ உலகின் நன்மையான நிலைப்பாட்டிற்கு தடங்கள் ஏற்படுமாயின் லௌகீக ஆட்சியாளர்களின் உள்விவகாரங்களில் தலையிட பாப்பரசருக்கு அதிகாரம் உண்டெனவும் பாப்பரசர் இறைவனை விடத் தாழ்ந்தவர் என்றும் மனிதனை விட உயர்ந்தவர் என்றும் அவர் அனைவரையும் கேள்விக்கு உள்ளாக்க முடியும் ஆனால் அவரை கேள்விக்கு உள்ளாக்க முடியாது என இக்காலத்தில் கூறப்பட்டது. இதனால் தேசிய திருச்சபைகளை சேர்ந்த பாதிரிமார்கள் சுயாதீனமாக செயற்படுவதற்கு பாப்பரசர் அனுமதிக்கவில்லை. இது தேசிய திருச்சபை பாதிரிமார்கள் சீர்திருத்தத்தை மேற்கொள்ள காரணமாகியது.
கத்தோலிக்க சபையின் ஊழல்களுக்கு எதிராக கருத்து தெரிவித்தோர் மற்றும் செயற்பட்டோர் பாப்பரசரால் கொலை செய்யப்பட்டனர். மூன்றாம் இன்னசன்ட் பாப்பரசரால் கத்தோலிக்க ஊழல்களுக்கு எதிராக செயற்பட்ட பொஹிமிய இனத்தவரான ஜோன்ஹஸ்; மற்றும் சவணரோலா போன்றோர் படுகொலை செய்யப்பட்டனர். இது பாப்பரசர் மீதும் திருச்சபை மீதும் வெறுப்பு ஏற்பட காரணமாகியது. அத்தோடு மதச்சீர்திருத்தம் ஏற்படுவதற்கு பாப்பரசர் பதவியின் மதிப்பு குறைவடைந்தமையும் காரணமாகும். பாப்பரசர் ஐரோப்பிய அரசியல் செயற்பாடுகளில் அதிகம் தலையிட்டமையினால் இறைவனின் பிரதிநிதியாக இருப்பதைவிட உலகில் ஆட்சியாளராக அவர் செயற்படுவதை கிறிஸ்தவ மக்கள் உணர்ந்ததால் பாப்பரசர் பதவிக்கு உரிய மரியாதை குறைவடையத் தொடங்கியது.
சமயசீர்திருத்தம் ஏற்படுவதற்கு ஒரேவேளையில் பல பாப்பரசர்கள் நியமனம் பெற்றமையும் ஒரு காரணமாகும். எட்டாம் பொனிபஸ் பாப்பரசரின் மரணத்தின் பின் 1305 ஆம் ஆண்டு பிரான்சிய இனத்தைச் சேர்ந்த ஆயர் ஒருவர் ஆறாவது கிளமன்ட் என்ற பெயரில் பாப்பரசர் ஆனார். அவர் உரோமுக்குச் செல்லாது றோன் நதிக்கரையில் உள்ள அவிஞ்சோன் நகரில் தங்கினார். இது முதல் பாப்பரசர் பதவிக்கு வந்த அநேகர் பிரான்சிய இனத்தவராவர். இவர்கள் உரோமிற்கு செல்லாமல் பிரான்சிலே வாழ்ந்தனர். இதனை பாபிலோனிய சிறைவாசம் என்பர். 1377 ஆம் அண்டு பாப்பரசர் பதவிக்கு வந்த 2ம் கிரகெறி உரோமிய மக்களின் வேண்டுகோளுக்கு அமைய உரோமில் தங்குவதற்குச் சென்றார். இவரின் பின்னர் ஆறாம் உர்பன் எனும் ஆயர் பாப்பரசர் பதவிக்கு வந்ததை பிரான்சின் கர்தினால்மார்கள் ஏற்றுக்கொள்ளாது 13ஆம் கிளமென்ட் பாப்பரசரைத் தெரிவுசெய்தனர். இச்சூழ்நிலையில் திருச்சபையை பாதுகாக்கும் நோக்கோடு அறிஞர்களாலும், கல்விமான்களாலும் அமைக்கப்பட்ட நிறுவனத்தால் அவ் இரு பாப்பரசர்களுக்கும் பதிலாக 5ம் அலெக்சாண்டர் எனும் பாப்பரசரை தெரிவு செய்தனர். இவ்வாறான பாப்பரசர் பதவி தொடர்பான மோதலை முடிவுக்கு கொண்டுவர பரிசுத்த உரோமப் பேரரசு தலையிட்டு புதிய பாப்பரசர் ஒருவரை நியமித்தனர். இவ்வாறான பாப்பரசர் பதவி மோதல்களால் பாப்பரசர் பதவிக்கு இருந்த மதிப்பு குறைந்தது.
தேசிய திருச்சபைகளின் எழுச்சியும் சமய சீர்திருத்தம் ஏற்பட காரணமாகும். திருச்சபையின் அதிகாரம் அளவு கடந்து அதிகரிப்பதை ஐரோப்பிய அரசர்களே எதிர்த்தனர். உரோமில் உள்ள பாப்பரசர் இத்தாலிக்கு சொந்தமானவர் எனவும் அவர் தம்மீது ஆதிக்கம் செலுத்துவது தவறு எனவும் எண்ணினர். ஜேர்மனி, இங்கிலாந்து ஆகிய நாடுகளில் தேசிய உணர்வுகள் பெருகியது. அந்த நாடுகளில் மன்னர்கள் பலம் அடைந்தனர். இவ்வாறான சூழ்நிலையில் அந்த அரசர்கள் தமக்கு கீழே செயற்படக் கூடிய தேசிய திருச்சபைகளை உருவாக்குவதில் அக்கறை செலுத்தினர்.
பொருளாதாரக் காரணிகள்
திருச்சபையின் வரி விதிப்பு தொடர்பாக மக்களிடையே ஏற்பட்ட அதிருப்தியானது சமயசீர்திருத்தம் ஏற்படுவதற்கான பொருளாதாரக் காரணமாகும். திருச்சபை ஆரம்ப காலத்தில் விதித்த வரியினை மக்கள் சமயம் சார்ந்தவையென எண்ணினர். நாளடைவில் திருச்சபையின் விரிவிதிப்பு நடவடிக்கைகள் மோசமாகின. உழைப்பின் குறிப்பிட்ட பகுதியை ஆட்சியாளர்களுக்கும் மதகுருமார்களுக்கும் திருச்சபைக்கும் செலுத்த வேண்டியிருந்தமையால் மக்கள் அதிருப்தி அடைந்தனர். அத்துடன் பலநாடுகளில் இருந்து சேகரிக்கப்பட்ட வரி உரோமுக்கு அனுப்ப வேண்டியிருந்தமை. தமது நாடுகளில் இருந்து வருடந்தோறும் பெரும் தொகையான பணம் உரோமுக்கு செல்வதை எழுச்சியுற்று வந்த தேசிய அரசுகளின் மன்னர்களும், மத்திய வகுப்பைச் சேரந்த மக்களும் எதிர்த்தனர். இந்த எதிர்ப்பானது சமய சீர்திருத்தம் ஏற்பட காரணமாகும்.
மத்தியகாலத்தில் தனியான அரசாக செயற்பட்ட திருச்சபைகளிடம் அதிகளவான பணமும் நிலமும் காணப்பட்டது. அவ்வாறு காணப்பட்ட செல்வத்தை தமதாக்கிக் கொள்வதற்கு முடியாட்சி ஆட்சியாளர்களும், வர்த்தக சபையினரும் முயன்றனர். செல்வத்தை சேகரிப்பதற்கு திருச்சபை பல வழிமுறைகளை கையாண்டதும் அதனை தமக்கு சாதகமாக பயன்படுத்த திருச்சபைகளும் முடியாட்சியாளர்களும் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டனர். திருச்சபையின் பொருளாதாரத்தை மேம்படுத்தும் பொருட்டும் தனிநபர்களின் வருவாயைப் பெருக்கிக் கொள்ளும் பொருட்டும் திருச்சபையின் உயர் பதவிகளை விலைக்கு விற்றமையும் அதனால் அதிகளவான பணம் தவறாக கையாளப்பட்டது. இச் செயற்பாடானது மதச்சீர்திருத்தம் ஏற்பட காரணமாகியது.
மதச்சீர்திருத்தம் ஏற்படுவதற்கான உடனடிக் காரணமாக அமைந்தது பாவமன்னிப்பு பத்திரங்கள் விற்பனை செய்யப்பட்ட சம்பவமாகும். உரோமிலே பாப்பரசர் பத்தாம் லியோ புனித பீற்றர் தேவாலய திருப்பணியை மேற்கொண்டிருந்தார். இதற்கு அதிக நிதி தேவைப்பட்டதனால் பாப்பரசர் பத்தாம் லியோ 1517 ஆம் ஆண்டு “ஜோன்ரெட்செல்” எனும் பாதிரியாரை பொகிமியாவிற்கு அனுப்பினார். இவர் ஜேர்மனியில் விற்றன்பேர்க் பல்கலைக்கழகத்தில் பாவமன்னிப்புச் சீட்டுக்களை விற்பனை செய்தார். அங்கு மாட்டின் லூதர் இவருக்கு எதிராக செயற்பட்டமை மக்கள் மத்தியில் வழிப்புணர்வை ஏற்படுத்தியது. இச் சம்பவமானது மதச்சீர்திருத்தம் ஏற்படுவதற்கு உடனடிக் காரணமாகும்.
அரசியல் காரணங்கள்
மதச்சீர்திருத்தம் ஏற்படுவதற்கான காரணங்களுள் பிரதானமாக அமைவது தேசியஅரசு முறையில் மன்னர்களுக்கும், பாப்பரசர்களுக்கும் இடையே அதிகாரம் தொடர்பாக ஏற்பட்ட மோதலாகும். ஆரம்ப காலங்களில் திருச்சபைகள் அரசியலில் தலையிட்டும் திருச்சபை நிலங்களில் இருந்தும் வரிகளை அறவிட்டு செயற்பட்டன. பின்னர் தேசிய அரசு முறைமை வளர்ச்சியடைந்ததால் அரசியல் விடயங்களிலும் வரி அறவிடுதலிலும் இருந்த அதிகாரங்கள் தடை செய்யப்பட்டது. உதாரணமாக பிரான்சின் நான்காம் பிலிப் மன்னனும், இங்கிலாந்தின் முதலாவது எட்வட் மன்னனும் திருச்சபையின் நிலங்களிலிருந்து வரியை அறவிட்டனர். இது பாப்பரசர்களுக்கும் ஆட்சியாளர்களுக்குமிடையில் போட்டியை ஏற்படுத்தியது இது மதச்சீர்திருத்தம் ஏற்படுவதற்கான காரணமாகும்.
பாப்பரசின் ஆதிக்கத்தை கட்டுப்படுத்துவதற்காகவும் அவர்களின் அதிகாரத்தை கட்டுப்படுத்துவதற்காவும் ஆட்சியாளர்கள் சர்வாதிகார போக்குடன் கடுமையான கொள்கைகளையும் கடைப்பிடித்தனர். பாப்பரசரின் எதிர்ப்பைக் கவனத்தில் கொள்ளாது ஆயர்களை கைது செய்தல், சில சந்தர்ப்பங்களில் பாப்பரசர்களையும், குருமார்களையும் அரசர்களே நியமித்தனர். இது திருச்சபைக்கு எதிரான விழிப்புணர்வு மக்கள் மத்தியில் வளர்ச்சியடைந்து மதசீர்திருத்தம் ஏற்பட காரணமாகியது.
மதச்சீர்திருத்தத்திற்கான பிரதான காரணங்களுள் ஒன்று பரிசுத்த உரோமப் பேரரசனுக்கும், ஜேர்மனியின் பிரதேச இளவரசர்களுக்குமிடையேயான அரசியல் மோதல்களும் போட்டிகளுமாகும். ஜேர்மனியின் பிரதேச இளவரசர்கள் தத்தமது பிரதேசங்களில் பிரதேச திருச்சபைகளை தோற்றுவித்து போட்டியுடன் செயற்பட்டன. இவர்கள் புனித உரோமானியப் பேரரசர்களின் ஆதிக்கத்தை ஏற்க மறுத்ததுடன் தனித்துவமாக செயற்பட்டார்கள். ஜேர்மனிய பிரதேச இளவரசர்களுக்கும் புனித உரோமப் பேரரசுக்கும் இடையில் ஏற்பட்ட மோதல்கள் மதச்சீர்திருத்தத்திற்கு காரணமாகியது.
அறிவுக் காரணங்கள்
சமயசீர்திருத்தமானது ஏற்பட்டமைக்கான காரணங்களுள் அறிவுக் காரணங்களும் முக்கியமானவையாகும். மறுமலர்ச்சியின் தாக்கத்தினால் மக்களிடத்தில் பகுத்தறிவுவாத சிந்தனைகள் ஏற்பட்டது. மக்கள் சிந்திக்கவும் ஆராய்ந்து பார்க்கவும் செய்தனர். பாப்பரசரின் கருத்துக்களும், ஆணைகளும் மக்களால் ஆராயப்பட்டன. ஏற்றுக் கொள்ள முடியாத கருத்துக்கள் ஒதுக்கப்பட்டது.
இலத்தீன் மொழியில் எழுதப்பட்ட வேதாகமத்தை ஜோன் வைக்ளிப் ஆங்கிலத்திற்கும், மார்ட்டின் லூதரால் ஜேர்மன் மொழிக்கும் மொழிபெயர்ப்பு செய்யப்பட்டது. அத்தோடு மறுமலர்ச்சியால் ஏற்பட்ட விஞ்ஞான வளர்ச்சியால் அச்சியந்திரம் கண்டுபிடிக்கப்பட்டதும் வேதாகமத்தின் பிரதிகள் அச்சிட்டு வெளியிடப்பட்டது. இதன் மூலம் வேதாகமத்தின் பல பிரதிகள் மக்களை சென்றடைந்தது. இதனால் திருச்சபையின் நடைமுறைக்கும் வேதாகம கருத்துக்கும் இடையில் வேறுபாடு இருப்பதை உணர்ந்து திருச்சபையை திருத்த வேண்டியதன் அவசியத்தை உணர்ந்தனர்.
ஜேர்மனியில் மதச் சீர்திருத்த இயக்கம்
உரோமன் கத்தோலிக்க சபைக்கு எதிராக புரட்டஸ்தாந்து மதச் சீர்திருத்தம் முதன் முதலில் ஜேர்மனியில் தோற்றம் பெற்றது. அதற்கு பல காரணங்கள் உள்ளன.
தேசியநாடுகள் எழுச்சி பெற்ற காலத்தில் ஜேர்மனியானது பல சிற்றரகளாகப் பிரிந்து காணப்பட்டது. ஏனைய ஐரோப்பிய நாடுகள் ஒற்றுமைப்பட்டு பலம் அடைந்து தேசிய அரசுகள் தோன்றிய போதிலும் ஜேர்மனியில் அவ்வாறான வளர்ச்சி ஏற்படவில்லை. ஜேர்மனியின் இந்த அரசியல் கேவல நிலைக்கு காரணம் சமய மேலாதிக்கமே காரணமென்று அதனை உடைத்தெறிய அவர்கள் திடம் கொண்டனர்.
ஜேர்மனியின் பெருந்தொகையான பணம் உரோமிற்கு எடுத்துச் செல்லப்பட்டது. ஜேர்மனியிலே பெருந்தொகையான மக்கள் காணப்பட்டமையினால் அந்நாட்டின் பெருமளவிலான பணத்தினை சமய ரீதியாக அறவிட்டு அதனை உரோமுக்கு கொண்டு சென்று குருமார் தங்களுடைய ஆடம்பர செயற்பாட்டிற்கு ஈடுபடுத்தியது கண்டு ஜேர்மனிய மக்கள் கொதிப்படைந்தனர். இதனால் திருச்சபையினை சீர்படுத்த வேண்டும் என ஜேர்மனியர்கள் திடம் கொண்டனர்.
ஜேர்மனியில் சமயசீர்திருத்த இயகக்கமும் மாட்டின்லூதரின் பங்களிப்பும்
ஐரோப்பிய சமயசீர்திருத்தவாதிகளில் முக்கிய இடம் பெறுபவராகவும், தனக்கென ஒரு தனியான இடத்தினை வகுத்துக்கொண்டு புதியதொரு சமயப்பிரிவை ஆரம்பித்து கத்தோலிக்க திருச்சபையின் குறைபாடுகளை களைந்தவராகவும் மாட்டின் லூதர் காணப்படுகின்றார்.
கி.பி 1483 நவம்பர் 10 இல் ஜேர்மனியில் உள்ள ஐசல்பெனில் என்ற பகுதியில் வாழ்ந்த எளிய குடும்பமொன்றில் மாட்டின் லூதர் பிறந்தார். இவரது தந்தையார் ஒரு சுரங்கத் தொழிலாளி. லூதர் சிறிய வயதிலிருந்தே வறுமையால் பாதிக்கப்பட்டார். பல மூடப்பழக்கவழக்கங்கள் பற்றியும் அறிந்திருந்தார். ஜேர்மனியில் எர்வட் பல்கலைகழகத்தில் சமயம், தத்துவம் ஆகிய துறைகளில் பட்டம் பெற்றார். தொடர்ந்து விற்றன்பேர்க் பல்கலைக்கழகத்;தில் சமய இறையியல் பேராசிரியராக நியமனம் பெற்றார். விவிலிய வேதத்தை நன்கு கற்றார். வேதாகமம் தொடர்பான விரிவான கல்வியே லூதரின் பாடப்பரப்பாகும். பேராசிரியராக இருந்த காலத்தில் விவிலிய நூலினை மொழிபெயர்ப்பதிலும் மதம் சம்பந்தமான ஆராய்ச்சிகளிலும் ஈடுபட்டார். கி.பி 1511 அளவில் உரோமுக்கு சென்றார் அங்கு அப்போது காணப்பட்ட சமயநிலைமை அவருக்கு திருப்தியை தரவில்லை. அங்கிருந்த குருமார்களின் ஆடம்பர வாழ்க்கையினைக் கண்ணுற்றார். அச் சமயத்தில் பத்தாம் லியோ என்பவர் அங்கே பாப்பாண்டவராக கடமையாற்றி வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
விற்றன் பேர்க்கில் தமது சமயகல்வி சேவை மூலம் மக்கள் மத்தியில் பெரும் புகழ் பெற்றார். தன்னுடய சந்தேகங்களை மாணவர்களுக்கு கூறினார். நம்பிக்கையின் மூலமே கடவுளை அடைய முடியும் எனவும்; ஆன்மீக வாழ்விற்கு குருமார் இடைத் தரகராக நிற்பது தவறு எனவும் பாதிரிமார்களின் உல்லாச வாழ்வு செயற்பாட்டினையும் கண்டனம் செய்தார். திருச்சபையின் படிப்பினைகள் தொடர்பாக அவர் வினாக்கள் எழுப்பினார். பிறப்பிலேயே பாவம் உடைய மனிதன் மீட்பு பெறுவது எவ்வாறு?, மனிதன் மீட்படைய ஒரே வழி திருச்சபைதானா? இவையே இவர் எழுப்பிய வினாக்களாகும்.
1517 ஆம் ஆண்டு ரெட்செல் எனும் குரு பாப்பரசர் 10ம் லியோவின் கட்டளைப்படி சென் பீற்றர் தேவாலய புணரமைப்பு நிதிக்காக பாவமன்னிப்பு பத்திரம் விற்க வந்தபோது லூதர் அதனை எதிர்த்தார். கடவுள் மட்டுமே பாவங்களை மன்னிக்க வல்லவர் அதை விடுத்து பாப்பரசருக்கு மன்னிப்பு வழங்க அதிகாரம் இல்லை எனவும் பாப்பரசரின் மன்னிப்பு கிறிஸ்துவுக்கு ஊறு விளைவிக்கும் செயல் எனவும் பாவமன்னிப்பு பத்திரம் என்பது ஏழைகளையும் ஏமாளிகளையும் சுரண்ட இடம் பெறும் செயல் எனவும் கண்டனம் செய்தார். பாவமன்னிப்பை விமர்சித்து அதற்கு எதிராக 95 நியாயங்களை இலத்தின் மொழியிலே எழுதி 1518 அக்டோபர் மாதம் 31 ஆந் திகதி விற்றன்பேர்க் ஆலய கதவில் ஒட்டினார். இவ் வினாக்கள் ஜேர்மனிய மொழியிலே மொழி பெயர்க்கப்பட்டு உரோமப் பேரரசு முழுவதும் விநியோகம் செய்யப்பட்டது. இவரால் எழுதப்பட்ட “கத்தோலிக்கரின் சுதந்திரம்” என்ற நூல் பிரசித்தி பெற்றது. இது பாப்பரசருக்கு சவாலாக அமைந்தது. இதனால் பாப்பரசர் 10ம் லியோ லூதரை திருச்சபையில் இருந்து வெளியேற்ற அச்சுறுத்தும் கடிதம் ஒன்றை அவருக்கு அனுப்பினார் லூதர் இக் கடிதத்தை கண்டனம் செய்து பகிரங்க இடம் ஒன்றிலே தீ இட்டு எறித்தார். ஜேர்மனி எங்கும் லூதரின் கருத்து செல்வாக்கு பெற்றது. பல இலட்சம் மக்கள் லூதருடன் அணி திரண்டனர். இந்நிலையில் பாப்பரசரது ஆணைப்படி கி.பி 1520 பேரரசன் 5ம் சாள்ஸ் ஜேர்மன் சிற்றரசர்கள் முன்னிலையில் லூதரை அழைத்து விசாரித்தார். அச்சபையில் தன் செயல்கள் சரியானவையே என லூதர் வாதிட்டார். ஜேர்மனிய சிற்றரசர்களும் லூதருக்கு ஆதரவு வழங்கி இருந்ததால் சட்டத்தில் காப்பிழந்தவர் என்ற அறிவிப்பை விடுப்பதை தவிர லூதரின் மீது வேறு எந்த நடவடிக்கைகளையும் 5ம் சாள்சினால் மேற்கொள்ள முடியவில்லை.
திருச்சபையில் இருந்து நீக்கப்பட்ட லூதர் கி.பி 1522 ஆம் ஆண்டு திருச்சபை ஒன்றை நிறுவினார். தன்னுடைய கொள்கைகள் கோட்பாடுகளை அதிலே செயற்படுத்தினார். பல இலட்சம் மக்கள் அதில் இணைய அதுவே புரட்டஸ்தாந்து சமயமாக உருவெடுத்தது. ஞானஸ்தானம், இறுதி இராப்போசனம் தவிர்ந்த ஏனைய சடங்குகள் யாவும் கைவிடப்பட்டது. குருமார் திருமணம் செய்யலாம் எனவும், ஒழுக்க நெறியில் தவறக் கூடாது எனவும், திருச்சபை அரசிற்கு கட்டுப்பட்டதாக இருக்க வேண்டும் எனவும் விதிக்கப்பட்டது.
இக் காலப்பகுதியில் லூதரின் செல்வாக்கு பல பகுதிகளிலும் முன்னேற்றம் கண்ட வந்தது. இவரது கொள்கையை பின்பற்றியவர்கள் வன்முறைகளில் இறங்கினர். வரிச்சுமையால் பாதிக்கப்பட்டு கீழ் மட்டத்தில் இருந்த மக்கள் திருச்சபையிடம் இருந்த சொத்துக்களை பறிமுதல் செய்ய முற்பட்டனர். இதனால் கோபமடைந்த பேரரசர் 5ம் சாள்ஸ் மோசமான முறையில் கிளர்ச்சிகளை அடக்கினார்.
1526 இல் ஜேர்மானிய அரசர்களால் சமயப் பிரச்சினைகள் பற்றி கலந்துரையாடப்பட்டது. இதன்படி ஒவ்வொரு இளவரசரும் தமக்கு விருப்பமான சமயத்தை பின்பற்றலாம் என முடிவானது. எனினும் சமய ஒற்றுமையை ஏற்படுத்தும் நோக்கில் 1529 இல் நடைபெற்ற “ஸ்பியர்சபையில்” 5ம் சாள்ஸ் இத் தீர்மானத்தை ஆதரிக்கவில்லை. இதனால் ஜேர்மனிய இளவரசர்கள் பேரரசருடன் முரண்பட்டு உள்நாட்டு போருக்கான சூழலை ஏற்படுத்தினர். 1530 இல் ஒக்ஸ்பேர்க் இல் கத்தோலிக்க புரட்டஸ்தாந்து மதங்களை பின்பற்றுவோருக்கிடையில் ஒரு சமாதானத்த ஏற்படுத்த 5ம் சாள்ஸ் முனந்தார். ஆயினும் அது வெற்றி பெறவில்லை. புரட்டஸ்தாந்து இளவரசர்கள் ஸ்க்மால்ட் சங்கத்தை உருவாக்கினர். 1546 - 1552 காலப்பகுதியில் உள்நாட்டுப் போர்கள் நடைபெற்றன. போரின ஆரம்பத்திலேயே 1546 இல் மாட்டின் லூதர் இறந்தார். 1552 இல் செய்து கொள்ளப்பட்ட பஸ்ஸாவ் உடன்பாட்டின் மூலம் போர் முடிவுக்கு வந்தது. தொடர்ந்து 1555 இல் ஒக்ஸ்பேர்க் சமாதானம் உடன்படிக்கை ஏற்படுத்தப்பட்டது. இவ் உடன்பாட்டின் படி,
சிற்றரசுகள் தாம் கைப்பற்றிய பிரதேசங்களை வைத்துக் கொள்ளாலாம்.
ஜேர்மனிய சிற்றரசுகள் தாங்கள் விரும்பிய சமயத்தை பின்பற்ற முடியும். இதனால் வடக்கு ஜேர்மனியில் லூதரின் கோட்பாடுகள் செல்வாக்கு பெற்றுக் கொள்ள தென் ஜேர்மனியில் கத்தோலிக்க சமயத்தின் பலம் அதிகரித்து காணப்பட்டது.
எனினும் இவ் உடன்படிக்கையில் கல்வீனியக் கோட்பாடுகள், சுவிங்கிலயக் கொட்பாடுகள் பற்றி குறிப்பிடப்படவில்லை. எனவே இவ் உடன்படிக்கை எல்லோருக்கும் திருப்தியை தரவில்லை என்றே கூறலாம். இத்தகைய நிலைமை படிப்படியாக மோசமாகி முப்பதாண்டுப் போரினை வரவழைத்தது.
இங்கிலாந்தில் சமய சீர்திருத்தம்
இங்கிலாந்தில் சமய சீர்திருத்தம் தியூடர் வம்சத்தைச் சேர்ந்த 8ம் ஹென்றியின் ஆட்சிக் காலத்தில் முன்னெடுக்கப்பட்டது. 8ம் ஹென்றி அரியணை ஏறிய போது அவருக்கு வயது பதினெட்டு. இவர் ஒரு கத்தோலிக்கர். இவர் லூதரின் கருத்துக்களை கடுமையாக எதிர்த்ததுடன் தன் மதத்தின் ஒற்றுமைக்காக பாடுபட்டார். இதனால் “நம்பிக்கையின் காவலன்” என்ற பட்டத்தை 10ம் லியோ அவனுக்கு வழங்கினார். ஆயினும் இவர் மறுமணம் செய்ய முற்பட்ட போது மன்னனுக்கும் பாப்பாண்டவருக்குமிடையில் முரண்பாடுகள் அதிகரித்தன. ஹென்றியின் சகோதரர் மரணித்தும் அவரது மனைவியான கேத்தரின் என்பவரை இவர் திருமணம் செய்து கொண்டார். இவருக்கு பிறந்த குழந்தைகள் எல்லாம் இறந்து விடவே. தன் சகோதரனின் மனைவியை திருமணம் செய்து கொண்டதால்தான் தனக்கு இந்நிலை ஏற்பட்டதாக கருதி அவரை மணவிலக்கு செய்து ஆன்பொலின் என்ற பெண்ணை மறுமணம் செய்ய அனுமதி கேட்டார். இதற்கு அப்போது பாப்பரசராக இருந்த 7ம் கிளர்மென்ற் அனுமதி வழங்க மறுத்தார். ஆத்திரமடைந்த ஹென்றி அன்னேற்றஸ் என்ற சட்டத்தை இயற்றி அவருக்கு கிடைக்க வேண்டிய வருவாயை நிறுத்தினார். 1533இல் ஆன் பொலினை ஹென்றி திருமணம் செய்தார். இவர்களுக்கு பிறந்தவரே முதலாம் எலிசபெத். இவரது மறுமணத்தை செல்லாது என பாப்பாண்டவரால் அனுமதி மறுக்கப்பட்டதுடன் அவர் சமய விலக்கும் செய்யப்பட்டார். பதிலுக்கு பாப்பரசரை கட்டுப்படுத்த ஹென்றியும் பல சட்டங்களை இயற்றினார். 1533 இல் மன்னனால் முறைப்பாடு செய்கின்ற சட்டம் பிறப்பிக்கப்பட்டு திருமணம், திருமண விலக்கு ஆகிய தொடர்பாக பாப்பரசருக்கு மேன்முறையீடு செய்வது தடுக்கப்பட்டது. 1534இல் உயராண்மைச் சட்டத்தை பிறப்பித்து இங்கிலாந்து திருச்சபையின் தலைமைப் பொறுப்பை ஏற்றுக் கொண்டார். புதிய திருச்சபை ஏற்படுத்தப்பட்டது. இத் திருச்சபை ஆங்கிலத் திருச்சபை எனப்பட்டது. பின்னர் ஆன்பொலின் நடத்தையில் குறைகூறி அவருக்கு மரண தண்டனை வழங்கப்பட்டது. மீண்டும் மறுமணம் செய்து கொண்டான் அதன் மூலம் 6ம் எட்வேர்ட் மகனாகப் பிறந்தார். 1539 இவரால் விவிலிய நூல் ஆங்கில மொழி பெயர்ப்பு செய்யப்பட்டது.
• ஆறாம் எட்வேட்
எட்வேர்ட் அரியணை ஏறிய போது மிகவும் சிறுவனாக இருந்தார். இவர் ஒரு புரட்டஸ்தாந்து ஆதரவாளர். இவருடைய காலத்திலே புரட்டஸ்தாந்து மதம் வளர்ச்சி கண்டது. இவர் கத்தோலிக்க சமயத்திலிருந்து மக்களை விடுவிக்க எண்ணினார். ஒற்றுமை வழிபாட்டு சட்டத்தினை இயற்றி அதன் ஊடாக வழிபாட்டின் பொருட்டு வெளியிடப்பட்ட நூல்களை மக்கள் பயன்படுத்த வேண்டும் எனக் கட்டளை இட்டார். இவரின் 42 கோட்பாடுகள் மூலம் இங்கிலாந்து திருச்சபையின் கொள்கைகள் விளக்கப்பட்டன.
• மேரி
எட்வட்டின் மரணத்தை தொடர்ந்து மேரியின் ஆட்சி ஆரம்பமானது. இவருடைய காலத்தில் கத்தோலிக்க சமயம் புதுப்பொலிவு பெற்றது. இவள் லூதரின் கருத்துக்களை தீவிரமாக எதிர்த்ததோடு கத்தோலிக்க சமயத்திற்கு எதிரானவர்கள் இவரால் தண்டனை பெற்றனர். தோமஸ் கிறேன்மேர் உள்ளிட்ட புரட்டஸ்தாந்து தலைவர்கள் என்று கூறப்பட்ட 300 பேரை தூணிலே கட்டிவைத்து தீயிட்டு கொழுத்தினால். ஸ்பெயின் அரசர் 2ம் பிலிப்பினை இவள் மணந்து கொண்டாள். இவருடைய மோசமான செயற்பாடுகள் காரணமாக இவள் “இரத்த மேரி” என அழைக்கப்பட்டார்.
• முதலாம் எலிசபெத்
மேரி மறைந்ததும் முதலாம் எலிசபெத் சிம்மாசனம் ஏறினார். இவர் ஒரு புரட்டஸ்தாந்து ஆதரவாளர். இதனால் இவர் காலத்தில் இம் மதம் உன்னத நிலையினை அடைந்தது. எல்லா ஆலயங்களிலும் புரட்டஸ்தாந்து சமய அடிப்படையில் பிராத்தனை நடைபெறுவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டன. எனவே இங்கிலாந்தில் ஆட்சியிலிருந்த அரசர்களின் விருப்பு வெறுப்புக்கேற்ப கத்தோலிக்க புரட்டஸ்தாந்து மதங்கள் அங்கே செல்வாக்குடன் திகழ்ந்தன என்பது குறிப்பிடத்தக்கது.
பிரான்சில் மதச்சீர்திருத்த இயக்கம்
ஜேர்மனியில் மாட்டின் லூதரினால் பரப்பப்பட்ட சமயச் சீர்திருத்தக் கருத்துக்கள் பிரான்சிலும் செல்வாக்கு பெற்றுக் கொண்டது. தொடக்கத்தில் இந்நாடு அதிகளவு கத்தேலிக்கர்களைக் கொண்ட நாடாக இருந்தது. ஆனால் பிற்காலத்தில் கல்வீனிய சமயம் இந்நாட்டில் படிப்படியாக வேரூன்ற ஆரம்பித்தது. உயர் வகுப்பு மக்கள், நகரத்து மக்கள் போன்றவர்கள் இச் சயமத்தின் செல்வாக்குக்கு உட்பட்டனர். இவர்கள் ஹியூநோட்ஸ் எனப்பட்டனர். இந்நாட்டிலேதான் முதன் முதலில் கல்வீனியம் பரவியது. கல்வின் இந்நாட்டவராக இருந்தமையினாலும் இம் மதம் சார்ந்த நூல்கள் அதிகளவில் பிரான்சிய மொழியில் கிடைத்தமையாலும் இந்நாட்டில் இதன் செல்வாக்கு அதிகரித்திருந்தது. “ஜக்குவிஸ் லாபெயார்” என்பவரே முதன் முதலில் சீர்திருத்தக் கருத்துக்களை பிரான்சில் பரப்பியவர். பிரான்சிய அரசர் முதலாம் பிரான்ஸிஸ் ஆரம்பகாலத்தில் புரட்டஸ்தாந்து சமயத்திற்கு ஆதரவு வழங்கினான் இதனை விரும்பாத பாப்பரசர் பத்தாம் லியோ பிரான்ஸ் மீது படயெடுக்கும்படி ஐந்தாம் சாள்சை கூறவே 1525 இல் நடைபெற்ற பவேரியாப் போரின் போது பிரான்ஸிஸ் ஐந்தாம் சாள்சிடம் கைதியாகப் பிடிபட்டான். அதன் பின் பாப்பரசரின் ஆதரவைப் பெற்ற 2ம் ஹென்றியை பிரான்சிக்கு அரசனாக்கினான். இவன் கத்தோலிக்கத்தில் இருந்த பற்றினால் ஹியூநோட்ஸ்களை அழிப்பதிலேயே முனைப்பாக ஈடுபட்டான்.
1559 இல் பிரான்சிய அரசர் 2ம் ஹென்றி மறைந்ததும் தாயார் கேத்தரின் டி மெடிசி ஆட்சியாளரானார். இவருடைய ஆட்சி கொடுங்கோன்மை ஆட்சியாக இருந்ததால் பிரபுக்கள் சிலர் நாவார் அரசையும் மற்றவர்கள் கைஸ் குடும்பத்தையும் பின்பற்றினர். இவர்களில் கைஸ் பிரிவினரே கத்தோலிக்கர்களாக காணப்பட்டனர்.
1562இல் ஹைஸ் பிரபு தனது படையுடன் வாசியைக் கடந்து செல்லும் போது அங்கே வழிபாடு செய்வதற்காக கூடியிருந்த கல்வீனிய சமயத்தைச் சார்ந்தவர்களைக் கொலை செய்தார். இது வாசிப் படுகொலை என அழைக்கப்படுகிறது. இதனைத் தொடர்ந்து அங்கே உள்நாட்டுப்போர் ஆரம்பமானது. இப் போரில் கத்தோலிக்கர்களின் வெற்றி தமக்கு ஆபத்தாக அமையும் எனக் கருதிய கேத்தரின் புரட்டஸ்தாந்துக்களின் வெற்றியை நாடினார். 1527 இல் சென்ஹேர்மெயின் உடன்பாடு ஏற்படுத்தப்பட்டது. இதன் படி சமய சுதந்திரம் வழங்கப்பட்ட போதும் இவ் உடன்பாடு இரு பகுதியினருக்கும் திருப்தியை ஏற்படுத்தவில்லை.
தொடர்ந்து ஒன்பதாம் சார்ள்சின் ஆட்சியின் போது 1572 ஓகஸ்ட் 24 இல் புனித பார்த்தலோமியஸ் நாளன்று ஏறத்தாழ பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட புரட்டஸ்தாந்து மக்கள் கொலை செய்யப்பட்டனர். இது “பார்த்தலோமியஸ் படுகொலை” எனப்படுகின்றது. இந்நிகழ்ச்சியால் போர் மீண்டும் ஆரம்பமானது மூன்றாம் ஹென்றியின் காலத்திலும் இப்போர் தொடர்ந்தது.
ஹென்றி அரியணை ஏறுவதனைத் தடுக்கின்ற நோக்குடன் ஹென்றி மீது புரட்டஸ்தாந்து படைகள் போர் தொடுத்தன. போரில் மூன்றாம் ஹென்றி கொலை செய்யப்படவே நான்காம் ஹென்றி ஆட்சிக்கு வந்தார். இவர் புரட்டஸ்தாந்தவராக இருந்த போதும் மக்களின் ஆதரவினைப் பெறும் பொருட்டு கத்தோலிக்க சமயத்தை தழுவினார். இவர் அரியணை ஏறுவதற்கு இங்கிலாந்து அரசின் ஆதரவும் பக்கபலமாக இருந்தது. இவரை எதிர்த்து ஸ்பானியர்கள் போர் செய்தனர். 1598இல் வெர்ஹாஸ் என்ற இடத்தில் ஹென்றி ஸ்பெயின் அரசுடன் உடன்பாடு ஒன்றை செய்து கொண்டார். இதேயாண்டு நான்றெஸ் நல் ஆணையைப் பிறப்பித்து சமய உரிமைகளை இவர் புரட்டஸ்தாந்து மக்களுக்கு வழங்கினார்.
சுவிட்சலாந்தில் மதச்சீர்திருத்த இயக்கம்
சுவிட்சலாந்தில் சமயப் புரட்சியினைத் தொடங்கி வைத்தவர் உல்றிச் சுவிங்கிலி என்பவராவார். இவரினைத் தொடர்ந்து இப் பணியினை மேற்கொண்டவர் ஜோன் கல்வின் என்பவராவார்.
• உல்றிச் சுவிங்கிலி
சுவிட்சலாந்திலே உயரிய பிரபுக்கள் குடும்பத்திலே பிறந்த இவர் சிறு வயதிலேயே கத்தோலிக்க சமயத்தில் ஈடுபாடு கொண்டிருந்தமையால் கோஷன், வியன்னா, பேர்ன் முதலிய பல்கலைக்கழகங்களில் கல்வி கற்று கத்தோலிக்க சமயத்தில் பட்டம் பெற்றார். பாதிரியாராக விரும்பிய இவர் தாய் தந்தையருடன் விருப்பத்துடன் சமயக் குருவாக சமூகத்தில் சேவை செய்ய முன்வந்தார்.
இவரது செயற்பாடுகள் காரணமாக இவர் மீது நம்பிக்கை கொண்ட போப்பாண்டவர் சுவிற்சலாந்தில் உள்ள சூரிச் நகரில் பிரதம மதகுருவாக இவரை நியமித்தார். இவர் மதகுருவாக இருந்த சமயம் தனக்கு ஏற்படுகின்ற சந்தேகங்களை மக்கள் மத்தியில் எடுத்துரைத்தார். போப்பாண்டவரின் அதிகாரங்கள் தவறானவை என சுட்டிக்காட்டிய இவர் அரசனின் அதிகாரங்களில் போப்பாண்டவர் தலையிடக் கூடாது என வலியுறுத்தினார். விவிலியம் அல்லாத எந்த நூலும் கிறிஸ்தவ நூல் கிடையாது என்றார். பல இடங்களில் கத்தோலிக்க குருமார்களின் ஊழல்கள் பற்றியும் திருச்சபையில் மேற்கொள்ளப்பட வேண்டிய சீர்திருத்தங்கள் பற்றியும் எடுத்துக் காட்டினார்.
சூரிச் நகரில் பாதிரியாராகக் கடமையாற்றிக் கொண்டிருந்த போது பாப்பாண்டவரின் பிரதிநிதியாகப் பாவமன்னிப்பு சீட்டுக்களை விற்பனை செய்ய வந்த சாம்சனை எதிர்த்தார். இவருடைய நடவடிக்கைகளுக்கு சூரிச் மக்களின் ஆதரவு இருந்தது. திருச்சபையின் கட்டடங்கள் இவரின் ஆதரவாளர்களால் தகர்க்கப்பட்டன, மடங்கள் மூடப்பட்டன. இவர் மதகுருமார்கள் ஒழுக்கமும் நற்பண்பும் மிக்கவர்களாக விளங்க வேண்டும் என குறிப்பிட்டதோடு, திருமணம் புரிந்து நற்பண்புகளுடன் வழிகாட்டிகளாக வாழவேண்டும் என குறிப்பிட்டார். குறிப்பிட்டதோடு மட்டுமல்லாது துறவறத்தில் இருந்து விலகி திருமணமும் செய்து கொண்டார். ஏழைகள் நோயாளிகள் நாதியற்றவர்கள் முதலியோருக்கு உதவுவதன் மூலம் இறைவனின் அருளைப் பெறலாம் எனவும் வலியுறுத்தினார்.
இக்காலத்தில் லூதரின் ஆதரவாளர்களையும் சுவிங்கிலியின் ஆதரவாளர்களையும் இணைக்கின்ற முயற்சிகள் நடைபெற்றன. எனினும் இருவரது கொள்கைகளும் வேறுபட்டு காணப்பட்டன. ஆரம்ப காலங்களில் இருவரது இயக்கங்களும் ஒத்துப் போகின்ற நிலையில் காணப்பட்ட போதும் திருச்சபையின் ஆட்சி தொடர்பான கட்டுப்பாடுகளை சுவிங்கிலி ஏற்றுக்கொண்ட போது இருவருக்குமிடையிலே கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டன. இவர் லூதரால் உண்மையின் எதிரியெனவும் பழிக்கப்பட்டார்.
இருவரிடையிலும் திருவிருந்தைப் பற்றிய எண்ணந் தொடர்பாகவும் முரண்பாடுகள் காணப்பட்டன. லூதர் புனிதப்பொருள் மாறுகின்ற கொள்கையை நிராகரித்தார் அதே நேரம் மாறாக் கொள்கையை ஆதரித்தார். ஆனால் சுவிங்கிலியோ இரண்டு கொள்கைகளையும் ஏற்றுக் கொள்ளவில்லை. சுவிங்கிலியின் கோட்பாடுகள் தனியே வரையறை செய்யப்பட்டன. இவருடைய கோட்பாடுகளில் விவிலிய நூலுக்கு முதன்மை கொடுக்கப்பட்டிருந்தது. மனித உரிமைக் கோட்பாடுகள், சமஉரிமைக் கோட்பாடுகள் பற்றியும் அதில் கூறப்பட்டிருந்தது.
அக்காலப்பகுதியில் தீவிர கத்தோலிக்கர்கள் பலர் இவரது கருத்துக்களை எதிர்த்தனர். சுவிங்கிலியின் எழுச்சியில் நாடு இரண்டாக பிளவுபட்டுக் காணப்பட்டது. சுவிங்ளிசத்தாருக்கும் கத்தோலிக்கருக்கும் இடையில் 1531 இல் கேப்பல் என்ற இடத்தில் நடைபெற்ற சண்டையில் கத்தியால் குத்தப்பட்டு கொலை செய்யப்பட்டார். அவர் கொலை செய்யப்பட்டாலும் சுவிற்சலாந்திலே சுவிங்கிலச் சிந்தனை வலுப்பெற்றது.
• ஜோன்கல்வின்
பிரான்சின் வடபகுதியில் உள்ள பிக்கார்டி மாநிலத்தின் நோயன் என்ற இடத்தில் 1509 இல் நடுத்தர குடும்பத்தில் கல்வின் பிறந்தார். இளவயதிலேயே சமயத்தில் மிகுந்த ஈடுபாடு கொண்டவராக பாரிஸ் சென்ற கல்வின் அங்கே, சமயம், இலக்கியம் போன்ற பாடங்களைக் பயின்றார். தொடர்ந்து 1525 இல் ஓர்லியன்ஸ் பல்கலைக்கழகத்தில் சட்டக்கல்வியை மேற்கொண்டார். இச்சயமத்தில் லூதரின் புரட்சிக் கருத்துக்கள் இவரைக் கவர்ந்தன 1533 ஆம் ஆண்டு புரட்டஸ்தாந்து சமயத்திற்கு மாறினார். இவர் பிறந்த நோயன் என்ற ஊரில் கத்தோலிக்க சமயக் குறைபாடுகளை சுட்டிக்காட்டத் தொடங்கினார். இதனால் அங்கு மக்கள் புரட்டஸ்தாந்து சமய நடவடிக்கைகளில் ஆர்வம் காட்டத் தொடங்கினர். குறிப்பாக மதகுருமாரின் நடவடிக்கைகளை விமர்சிக்கத் தொடங்கினார். அவ்வேளையில் போப்பாண்டவரின் அழுத்தம் காரணமாக பிரான்ஸ் மன்னன் பிரான்சிஸ் இவரை கைது செய்து சிறையில் அடைக்க முற்பட்டான். இவ் வேளையில் கல்வின் 1536 இல் பிரான்சில் இருந்து தப்பித்து சுவிற்சலாந்து சென்றார். அவ்வேளை அங்கு சமய சீர்திருத்த இயக்கத்திற்கு தலைமை தாங்க யாருமில்லாத நிலை காணப்பட்டது. இவரது வருகையால் சுவிற்சலாந்தில் சமய சீர்திருத்த இயக்கம் மீண்டும் எழுச்சி பெறத் தொடங்கியது. ஜெனிவாவில் இவர் முதன்முதலாக பிரஸ்பீரிடிய அமைப்பினை ஏற்படுத்தினார். இவர் சமயம் தொடர்பான அதிகாரங்களை முதியவர்களிடம் ஒப்படைப்பதன் மூலமே சிறந்த கிறிஸ்தவர்களை உருவாக்க முடியும் என்றார். மாட்டின் லூதருடைய கருத்துக்களை அடிப்படையாகக் கொண்டு சமயசீர்திருத்த கருத்துக்களை இவர் முன்வைத்தார். ஆனால் பின்னாளில் இவரது கருத்துக்கள் மார்ட்டின் லூதருடைய கருத்துக்களில் இருந்து மாறுபட்டவையாக காணப்பட்டமையால் இவருடய சமய சிந்தனைகள் கல்வினிஸம் என அழைக்கப்பட்டன.
கல்வின் “கிறிஸ்தவ மத ஸ்தாபகம்” என்ற நூலை எழுதி வெளியிட்டார். இந்நூலில் கத்தோலிக்க திருச்சபையினது ஊழல்களைச் சுட்டிக்காட்டினார் மதகுருமார்கள், கர்தினால்கள், போப்பாண்டவர் முதலானோரின் ஆடம்பரமான வாழ்க்கை, சொத்து சேகரித்தல் முதலிய நடவடிக்கைகளை தவறு என சுட்டிக் காட்டினார். இவரின் போதனைகளில் ஒழுங்குமுறை, பூரணப்படுத்தப்பட்ட ஜனநாயகத் தன்மை என்பன காணப்பட்டன. தூயஆவி, பரிசுத்த ஆவி என்ற கோட்பாடுகள முதன்முதலில் முன்வைத்து பிரச்சாரங்களை முன்னெடுத்தார். “பரிசுத்த கிறிஸ்தவ வேதத்தனால் கடவுள் அறியப்படுகின்றார், பரிசுத்த ஆத்மாவினுடைய சக்தியால் நாங்கள் விடுவிக்கப்படுகின்றோம், பரிசுத்த ஆவியானது எங்களை கிறிஸ்துவுடன் இணைக்கின்றது” போன்ற கருத்துக்கள் இவரின் போதனைகளில் இடம் பெற்றன. இவர் சமயக் குருமாhர் அரசியலில் ஈடுபடுவதையும், அரசர்கள் சமய விடயங்களில் தலையிடுவதையும் கண்டித்தார். அத்துடன் யேசுவையோ, புனிதர்களையோ வழிபடுவதை விரும்பாத இவர் அவர்களது தூய ஆவியை வழிபடுமாறு வலியுறுத்தினார். “யேசு கிறிஸ்து ஒரு மனிதனே ஒழிய இவர் கடவுள் அல்ல அவரது ஆன்மாவே தூய்மையானது ஆதலால் அவரது தூய ஆவியை வழிபட வேண்டும்” என்றார். உருவம் வைத்து வழிபடுதல் தவறு என்றார்.
கல்வீனியம் பிற நாடுகளிலும் பரவியது. பிரான்ஸ், ஜேர்மனி, பிரித்தானியா, ஸ்கொட்லாந்திலும் இதன் பரவல் தொடர்ந்நதது. இந் நாடுகளில் இருந்து பலர் ஜெனீவா வந்தடைந்து இவரின் கொள்கைகள் பற்றி தெரிந்து கொண்டனர். இங்கிலாந்தின் பியூரிடன்கள், ஸ்கொட்லாந்து பிரஸ்பிரீடியன், பிரான்ஸ் ஹியுநோட்ஸ் என்பவர்கள் கல்வீனிய சமயத்தைச் சார்ந்தவர்களாக காணப்பட்டனர். இவருடைய கொள்கைகள் ஓரளவுக்கு இறுக்கமானவையாக காணப்பட்டன. கத்தோலிக்க சமயத்தில் காணப்பட்ட மாறுபாட்டுக் கோட்பாட்டினை இவர் எதிர்த்தார். தேவைக் கோட்பாட்டின் அடிப்படையிலே இம் மதம் இணக்கப்பட்டிருந்தது. இக் கோட்பாட்டிற்கு முறையான வரைவிலக்கத்தினை கொடுத்த இவர் திருச்சபையானது அரசியலில் தலையிடக் கூடாது என்றார். சுவிற்சலாந்தில் சுவிங்கிலி, கல்வின் ஆகியோரின் கொள்கைகளை பின்பற்றி வந்த திருச்சபைகள் பிற்பட்ட காலங்களில் தமக்குள் உடன்பாடுகளை செய்து கொண்டு இணைந்து ஓர் புரட்டஸ்தாந்து சபையாகச் செயற்பட்டன.
ஸ்கொட்லாந்தில் மதச்சீர்திருத்த இயக்கம்
பதினாறாம் நூற்றாண்டிலே மதச்சீர்திருத்த இயக்கம் ஸ்கொட்லாந்திலும் ஏற்பட்டது. இந்நாட்டில் இவ்வியக்கம் கல்வீனியக் கோட்பாட்டினப்படையிலே தான் வளர்ச்சி கண்டது. இந்த நாட்டிலும் சமயங்களுக்கிடையிலே ஏற்பட்ட போட்டியின் காரணமாக பலர் தண்டனைகளை பெற்றுக் கொண்டனர். ஐந்தாம் ஜேம்ஸின் காலத்தில் தான் இந் நாட்டில் மதச்சீர்திருத்த இயக்கம் முதன்மை பெற்றது. 1545 மன்னரின் இறப்புடன் மகள் மேரியிடம் ஆட்சிப் பொறுப்பு சென்றடைந்தது. மேலும் இவருடைய காலத்திலும் சமயச் சீர்திருத்த இயக்கத்தின் நடவடிக்கைகள் தொடர்ந்தன. விவிலிய நூல் ஸ்கொட்லாந்து மொழியில் மொழிபெயர்க்கப்பட்டது.
• இராஸ்மஸ்
இராஸ்மஸ் ஒல்லாந்து நாட்டினை பிறப்பிடமாகக் கொண்டவர். இங்கிலாந்து, ஜேர்மனி, இத்தாலி, பிரான்ஸ் போன்ற பல நாடுகளில் வாழ்ந்தவர். இவரால் திருச்சபையின் ஊழல்களை எதிர்த்து பல நுஸல்கள் வெளியிடப்பட்டன. இம் முயற்சியினூடாக திருச்சபையில் காணப்பட்ட சீர்கேடுகள நீக்குவதிலும், குருமார்களின் நடவடிக்கைகளை கட்டுப்படுத்துவதிலும் முனைப்புடன் ஈடுபட்டார்.
இவர் தனது பெற்றோரின் விருப்பத்திற்கிணங்க சிலகாலம் மடத்தில் வாழந்து வந்தார். அங்கே தான் வாழ்ந்த காலத்தில் குருமார்களின் நடவடிக்கைகளினை அவதானித்தார். அவர்களிடம் சமய உணர்வோ அதனை பரப்ப வேண்டுமென்ற எண்ணமோ இருக்கவில்லையென்பதை உணர்ந்து கொண்டார். அவர்கள் ஆடம்பர வாழ்க்கையில் ஈடுபட்டு வந்தனர். நிதிசேகரிப்பதே அவர்களின் முக்கிய நோக்கமாக காணப்பட்டது. இவரால் கிறிஸ்துவின் போதனைகள் புதிய ஏற்பாடுகளின் படி கிரேக்க இலத்தீன் மொழியிலிருந்து மொழிபெயர்க்கப்பட்டது. மேலும் இவர் “மூடர்களின் பெருமை” என்ற நூலினை எழுதி அதன் மூலம் குருமார்களின் நடவடிக்கையை கட்டுப்படுத்தினார்.
• ஜோன்நொக்ஸ்
மிக இளவயதிலேயே கத்தோலிக்க சமயத்தில் அக்கறை கொண்ட நொக்ஸ் தான் கொண்டிருந்த கத்தோலிக்க சமயத்தின் ஈடுபாட்டினால் மதகுருவானர். ஆனால் பின்நாளில் திருச்சபைக்கு எதிராக போராட்டத்தில் இறங்கினார். 1546 இன் பின்பாக இவர் வெளிப்படையாக திருச்சபையினைத் தாக்கத் தொடங்கினார். இதனால் ஒல்லாந்திலிருந்து விரட்டப்பட்டார். தொடர்ந்து இங்கிலாந்து பிரான்ஸ் போன்ற நாடுகளில் தனது வாழ்நாளினைக் கழித்தார்.
இங்கிலாந்திலே ஆறாம் எட்வேர்ட்டின் மதகுருவாக நியமிக்கப்பட்ட போது அங்கே புரட்டஸ்தாந்து சமயத்தின் கொள்கைகளை இங்கிலாந்தின் திருச்சபையில் புகுத்த முற்பட்டார். கல்வினுடன் இவர் தொடர்புகள் கொண்டிருந்தார். இவரின் திருச்சபையின் மாதிரியினைக் கொண்டே 1560 இல் பிரஸ்பிரீடியத் திருச்சபையை கல்வின் ஏற்படுத்தினார்.
மதச்சீர்திருத்தத்தின் விளைவுகள்
ஐரோப்பிய வரலாற்றிலே இடம் பெற்ற முக்கிய நிகழ்வுகளில் ஒன்றாக குறிப்பிடப்படுவது மதச்சீர்திருத்த இயக்கமாகும். கி.பி 15ம் நூற்றாண்டில் தோன்றிய மதச்சீர்திருத்த இயக்கத்தினால் அரசியல், பொருளாதார, கலாசார, சமய அடிப்படையில் பல்வேறு விளைவுகள் ஏற்பட்டன அவையாவன, மத்திய ஆசியாவில் உருவாகி உரோம சக்கரவர்த்திகளின் ஏற்பாட்டுடன் ஐரோப்பாவில் பரப்பப்பட்ட கிறிஸ்தவம் இது காலம் வரை உலகின் தனிப்பெரும் சமயமாக நிலை பெற்றிருந்தது. ஆனால் மதச்சீர்திருத்தம் இயக்கம் ஏற்பட்டதைத் தொடர்ந்து புரட்டஸ்தாந்து பிரிவினர் தோன்றினர். இவர்கள் லூதருடய கருத்துக்களை உள்வாங்கி ஒழுங்குபடுத்தப்பட்ட ஒரு சமயப் பிரிவாக பரிணாமித்தனர். எனவே ஒன்றாக இருந்த திருச்சபை உரோமன் கத்தோலிக்கம், புரட்டஸ்தாந்து என பிளவுபட்டுக் கொண்டது.
மதச்சீர்திருத்த இயக்கம் பல சமயப் போர்களும் சமய கலவரங்களும் ஏற்பட வழிவகுத்தது. 1521 - 1525 ஆகிய ஆண்டுகளில் ஜேர்மனியில் சமய கிளர்ச்சி ஏற்பட்டது. இறுதியில் முப்பதாண்டுப்போர் ஏற்படவும் அதன் காரணமாகவும் இதனால் பெருமளவு அழிவு ஏற்படவும் காரணமானது. இதனால் ஐரோப்பிய நாடுகளும் அணிபிரிந்து கத்தோலிக்க நாடுகள், புரட்டஸ்தாந்து நாடுகள் என அவை இரண்டானது. அந்த நாடுகளில் ஏனைய சமயத்தவர்கள் மீது மோசமாக துன்புறுத்தல்கள் மேற்கொள்ளப்பட்டது. இதனால் சகிப்புத் தன்மை குலைந்தது.
மதச்சீர்திருத்த இயக்கத்தின் தோற்றத்தினால் பாப்பரசர் மற்றும் மதகுருமார்களின் அதகாரங்கள் குறைவடைந்தன. “சமயம் வேறு, அரசியல் வேறு” என்ற நிலை தோன்றியது. அரசியலில் மதகுருமார்கள் தலையிடுவது தவறு என சுட்டிக்காட்டப்பட்டு தவிர்க்கப்பட்டது. இதுவே பிற்காலத்தல் தேசிய அரசுகள் தோற்றம் பெறவும் வழிவகுத்தது. அத்தோடு சமயத் தலைவர்கள் அரச நிருவாகத்திற்கு கட்டுப்படும் நிலையும் தோன்றியது.
மதச்சீர்திருத்தத்தினால் புதிய சமயங்கள் தோன்றிமையால் பல்வேறு சமயச் சண்டைகள், சமயக் குழப்பங்கள் என்பன ஏற்பட்டது. பார்த்தலோமியன் படுகொலை, வாசிப்படுகொலை, முப்பதாண்டுப்போர் போன்றன ஏற்பட்டது. இதனால் பல்வேறு உயிரிழப்புக்களும், சொத்துக்களும் அழிவடைந்தன. பின்நாளில் கத்தோலிக்க சமயத்தை பாதுகாக்கவும் வளர்த்தெடுக்கவும் எதிர்மதச் சீர்திருத்த அமைப்பு தோற்றம் பெற்றது. கத்தோலிக்க மதத்திலே இயேசுசபை, டிரன்ட்சபை, இன்சென்ட்சபை போன்ற பல்வேறு சபைகள் தோற்றம் பெற்றன.
மதச்சீர்திருத்தத்தின் போது விவிலிய வேதாகமம் திருச்சபைக் குருமாரால் தவறாக கையாளப்படுவதாக புரட்டஸ்தாந்தினால் குற்றம் சாட்டப்பட்டது. அதன் விளைவாக ஜோன் வைக்கிளிப் அதை ஆங்கிலத்திலும், லூதர் ஜேர்மன் மொழியிலும் மொழிபெயர்க்கவே அநேக ஐரோப்பிய மக்கள் அதை கற்க வாய்ப்பு ஏற்பட்டது. மக்களது சிந்தனைத்திறன் வளர்க்கபட்டு ஆரோக்கியமான சமூகமுறை தோன்றியது.
மதச்சீர்திருத்த விளைவுகளில் ஒன்று ஜனநாயக ஆட்சி ஏற்படவும் இது வழிவகுத்தது. திருச்சபையின் நிர்வாகம் சர்வாதிகார முறைப்படி நடைபெறுவதாகவும் பாப்பரசர் சர்வாதிகாரி போன்று செயற்படுவதாகவும் பலர் கண்டித்தனர். திருச்சபை நிர்வாகம் ஜனநாயக முறைப்படி நடக்க வேண்டும் என்று அனைவரும் குரல் எழுப்பினர். எட்டாம் ஹென்றி பாராளுமன்றத்தின் உதவியுடன் இங்கிலாந்தில் சமயப் பொறுப்பைப் பெற்றான். இது இங்கிலாந்தில் பிற்காலத்தில் ஜனநாயக ஆட்சிமுறை ஏற்பட காரணமாகியது.
மதச்சீர்திருத்தத்தின் விளைவுகளால் கிறிஸ்தவம் உலகம் முழுவதும் பரவியது. கத்தோலிக்கருக்கும் புரட்டஸ்தாந்தினருக்கும் இடயிலான சமயப் போட்டியால் இரு தரப்பினரும் போட்டி போட்டுக் கொண்டு தங்களது சமயத்தை பரப்பினர். தம்மால் வெல்லப்பட்ட நாடுகளிலும் தமது சமயத்தை பரப்பினர். இங்கிலாந்து போன்ற நாடுகளில் கத்தோலிக்க சமயத்தை பரப்புவதற்காக மிசனறி அமைப்புக்கள் தோற்றம் பெற்றன. இவ் மிசனறிகள் சமயத்தை பரப்புவதை நோக்கமாக கொண்டு அவர்களால் கைப்பற்றப்பட்ட நாடுகளில் சமயத்தை பரப்பினர். இதனால் உலகின் எல்லாக் கண்டங்களிலும் கிறிஸ்தவம் பரவியது.
எனவே மேற் கூறப்பட்ட விடயங்களை தொகுத்து நோக்குகின்ற போது ஐரோப்பிய வரலாற்றிலே மதச்சீர்திருத்த இயக்கத்தின் தோற்றத்தினால் பல்வேறு விளைவுகள் தோற்றம் பெற்றமையை காணலாம்.
எதிர்மதச் சீர்திருத்தம்
புரட்டஸ்தாந்து இயக்கத்தால் கத்தோலிக்க சபை சவால்களுக்கு முகம் கொடுக்க நேரிட்டது. இதனால் கத்தோலிக்க மதம் செல்வாக்கிழந்து போகத் தொடங்கியது. இதனால் இச் சவால்களுக்கு முகங்கொடுத்து கத்தோலிக்க மதத்தை பாதுகாக்கவும் கத்தோலிக்க மதத்தின் குறைபாடுகளை நீக்கி கத்தோலிக்க மதம் மீண்டும் எழுச்சியடைவதற்கு பாப்பரசர் மற்றும் திருச்சபைக் குருமாரால் ஏற்படுத்தப்பட்டதே எதிர்மத சீர்திருத்தமாகும். பாப்பரசர்களாகிய 4ம்பயஸ், 3ம்போல், 10ம்லியோ போன்றோர் இதற்கு வழிவகுத்தனர். எதிர்மத சீர்திருத்தத்தின் நோக்கங்கள் பின்வருமாறு,
1. புரட்டஸ்தாந்து எனும் இயக்கத்தால் முன்வைக்கப்பட்ட கருத்துக்கள் தகர்க்கப்படல்.
2. புரட்டஸ்தாந்து மதம் பரவுவதை தடை செய்தல்.
3. சமய ஒற்றுமையை நிலைநாட்டல்.
டிரென்ற் சபை (திரிதெந்தின் பொதுசங்கம்) (1545 - 1563)
வடஇத்தாலியில் உள்ள டிரென்ற் (திரிதெந்தின்) என்ற இடத்தில் 3ம் போலின் முயற்சியால் 1545இல் ஒரு கூட்டம் கூட்டப்பட்டது. பல தடவைகள்கூடிய இச் சங்கத்தில் அக்காலத்தில் அழிவுற்ற கத்தோலிக்க சபையின் நிலையை மீண்டும் கட்டியெழுப்புவதும், இழந்த அதிகாரத்தை மீளப் பெற்றுக் கொள்வதுமே இதன் நோக்கங்களாக அமைந்தன. தொடர்ந்து பலமுறை நடைபெற்ற இக் கூட்டமானது 1563இல் இறுதியாக நடைபெற்ற கூட்டத்தில் பல்வேறு தீர்மானங்கள் எடுக்கப்பட்டன. அம் முடிவுகளை அடிப்படையாக கொண்டு கத்தோலிக்க மத்தின் குறைபாடுகளை சீர் செய்வதோடு, ஏனைய சமயங்களின் செல்வாக்கை கட்டுப்படுத்துவதை நோக்காக கொண்டு செயற்பட்டது. இச்சங்கத்தால் மேற்கொள்ளப்பட்ட செயற்பாடுகள்.
உண்மையான கத்தோலிக்க மதம் வேதாகமத்தை அடிப்படையாகக் கொண்டுள்ளதென்றும், வேதாகமத்தை விளக்கும் உரிமை கத்தோலிக்க சபைக்கு மட்டுமே உண்டு எனவும் தீர்மானிக்கப்பட்டது.
மீட்படைய இறைவன் மீது விசுவாசம் கொள்வது போன்று, நற்செயல்களும் அவசியம் என்பதை வலியுறுத்தல்.
கத்தோலிக்க சபையில் பாப்பரசரின் அதிகாரமும், தலைமத்துவமும் பற்றி வலியுறுத்தல்.
ஆயர்களும், குருமார்களும் முறையே ஒரு மறைமாவட்டம், ஒரு பங்கு என்பவற்றிக்கு மேலாகப் பொறுப்பினை வகித்தல் தடைசெய்யப்படல், விவாகம் செய்தலும் தடைசெய்யப்படல்.
குருமாணவர்களை பயிற்றுவிக்கும் பொருட்டு அனைத்து மறை மாவட்டங்களிலும் குருத்துவப் பயிற்சிக் கல்லூரிகளை அமைக்க வேண்டுமென தீர்மானித்தல்.
கத்தோலிக்க மதத்திற்கு எதிராக செயற்படும் ஆயர்கள், குருக்களுக்கு தண்டனை வழங்கள்.
மரபுரீதியான இலத்தீன் வேதாகமத்தை ஏற்றுக் கொள்ளல்.
வரிசேகரித்தல், பாவமன்னிப்பு பத்திரம் விற்றல் ஆகியன உடனடியாக நிறுத்தப்படல் வேண்டும்.
இன்ரெக்ஸ்
கத்தோலிக்க சமயத்தவர்கள் தமது சமயத்திற்கு முரணானது எனச் சில நூல்களை தடை செய்தனர். அவர்களால் தடைசெய்யப்பட்ட நூல்களின் அட்டவணைமொன்று தயாரிக்கப்பட்டது. கத்தோலிக்க மதத்த பாதுகாப்பதோடு கத்தோலிக்க மதத்தை சீர்படுத்துவதும் இதன் நோக்கமாக இருந்தது.
இயேசு சபை (1534)
எதிர்மத சீர்திருத்த அமைப்புக்களில் மிகவும் சிறப்பாக செயற்பட்டது இயேசு சபை ஆகும். ஸ்பானிய இனத்தவரான இக்னேசியஸ் லோயாலா என்பவரால் இது நிறுவப்பட்டது. அவரால் எழுதப்பட்ட “ஆத்ம அப்பியாசம்” என்ற நூல் இயேசு சபையினரின் கைநூலாகியது. ஸ்பெயின் நாட்டிலுள்ள உயர் குடும்பமொன்றில் பிறந்த லொயலா ஆரம்பத்தில் இராணுவத்தில் பணியாற்றினார். வடக்கு ஸ்பெயினில் நடைபெற்ற யுத்தத்தின் போது தனது காலை இழந்தார். பின் இராணுவத்தில் இருந்து வெளியேறி கத்தோலிக்க மதத்தில் கொண்ட பற்று காரணமாக பின்னாளில் பாதிரியாராக மாறி இவ்வமைப்பை தோற்றுவித்தார். இவர் இராணுவத்தில் பணியாற்றியதால் இங்கு இராணுவ ஒழுக்கம் கடைபிடிக்கபட்டது. கடுமையான விதிகள் இங்கே பின்பற்றப்பட்டது. இதன் அங்கத்தவர்கள் கத்தோலிக்க சமயத்தை பரப்பும் பொருட்டு உலகின் பல பகுதிகளுக்கும் சென்று வந்தனர். இச் சபையினைச் சேர்ந்த சீடர்களில் ஒருவரான பிரான்சிஸ் சேவியர் என்பவர் இந்தியா போன்ற நாடுகளுக்குச் சென்று சமயத்தை பரப்பினார் என்பது குறிப்பித்தக்கது. இவர் மட்டுமன்றி குவைறோஸ் சுவாமிகள், ஜோசப்வாஸ் அடிகளார், கொன்ஸல்வேஸ் அடிகளார் போன்றோரும் ஆசியாக் கண்டத்தில் மதத்தை பரப்புவதில் அரும்பணியாற்றினார்கள். போதனைகளில் ஈடுபட்ட இயேசு சபையினர் போதனை செய்வதில் தங்களை தாங்களே அர்;ப்பணித்தனர். பாடசாலைகள் பல இவர்களால் தாபிக்கப்பட்டு பல்லாயிரக்கணக்கான மாணவர்களுக்கு கல்வி கற்கும் வாய்ப்பினை ஏற்படுத்திக் கொடுத்தனர். சிலர் கல்விக்கும் சிலர் சமயப் போதனைகளுக்கும் பொறுப்பாக காணப்பட்டனர்.
இதன் அங்கத்தவர்களுக்கு அதிகாரப் பத்திரம் வழங்கப்பட்டதன் காரணமாக பாப்பரசர் 3ம் போல் சர்வதேச தேவாலயத்தின் புனிதர் அலுவலகத்தினை உரோமில் தாபித்தார். இதில் பாப்பாண்டவர் சபையின் அங்கத்தவர்கள் ஆறு பேர் நியமிக்கப்பட்டனர். இதன் அதிகாரிகளுக்கு பல மேலதிக அதிகாரங்கள் வழங்கப்பட்டன. குறிப்பாக நூல்களை தடைசெய்தல், சந்தேக நபர்களை சிறையிலடைத்தல், குற்றவாளிகளுக்கு தண்டனை வழங்குதல் போன்ற பல அதிகாரங்கள் இவர்களிடம் வழங்கப்பட்டன.
இன்குவிஷன்
இதனை உருவாக்கியவர் இன்னேஸற் என்பவராவார். இவ்வமைப்பு கி.பி 1208 இல் நிறுவப்பட்டது. இது கடுமையான முறையிலே செயற்பட்ட ஒரு சங்கமாகும். புரட்டஸ்தாந்து மதத்தினை ஒடுக்குவதற்கு கத்தோலிக்கர்கள் மேற்கொண்ட நடவடிக்கைகளில் இதுவும் ஒன்றாகும். கத்தோலிக்க சமயத்திற்கு எதிரானவர்களை சமய விரோதிகளாகக் கருதி அவர்களுக்கு தண்டனை வழங்கும் நோக்குடன் ஏற்படுத்தப்பட்டது. இம் மன்றத்திற்கு குற்றங்களை விசாரணை செய்து தண்டனை வழங்கும் அதிகாரத்தினை பாப்பரசர் மூன்றாம் போல் வழங்கினார். பாப்பரசரின் மன்ற உறுப்பினர்களில் ஆறுபேரினை நீதிபதிகளாகக் கொண்டு இம்மன்றம் செயற்பட்டது. இம் மன்றம் வழங்கிய தண்டனைகள் கொடுங்கோன்மை நிறைந்தனவாக காணப்பட்டன. பின்னர் இதன் கொடுமையான செயற்பாடுகள் குறைத்துக் கொள்ளப்பட்டன.
திருச்சபையில் காணப்பட்ட ஊழல்களை நீக்குகின்ற நோக்குடன் முற்போக்குவாதிகளால் ஆரம்பிக்கப்பட்ட மதச்சீர்திருத்த இயக்கம் எடுத்த நடவடிக்கைகளின் காரணமாக கத்தோலிக்க சமயத்தில் பிளவுகள் ஏற்பட்டு புரட்டஸ்தாந்து சமயப்பிரிவுகள் உருவாயின. கத்தோலிக்க சமயத்திலும் சீர்திருத்தங்கள் ஏற்பட்டன. மக்கள் சமய சுதந்திரத்தினை அனுபவித்தனர்.
ரஷ்ய புரட்சி
ரஷ்ய புரட்சி மனிதகுலமானது பல்வேறு புரட்சிகளையும் போராட்டங்களையும் தாண்டி வளர்ந்துள்ளது. இவற்றுள் பல புரட்சிகள் சமூக அமைப்பினையும் அரச அமைப்...
-
ஒல்லாந்தர் ஆட்சிக்காலம் (கி.பி 1658 - கி.பி 1796) 1648 ஸ்பெயின் ஆதிக்கத்திலிருந்து விடுபட்டு தனி சுதந்திர நாடாகிய ஒல்லாந்து வர்த்தகப் பொரு...
-
உரோமப் பேரரசின் வீழ்ச்சிக்குப் பின் படிப்படியாக வளர்ச்சியைக் கண்டு 12ம், 13ம் நூற்றாண்டில் ஐரோப்பா ழுழுவதும் பரவலடைந்த அரசியல் பொருளாதாரம், ...